உலகின் மிகப்பெரிய தேடுப்பொறி நிறுவனமாக கூகுள் (Google) நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெள்ளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகள் மற்றும் யுடியூப் கணக்குகளை நீக்க போவதாக தெரிவித்துள்ளது.

அதிகப்படியான பயனர்கள் ஜிமெயில் கணக்குகள் மற்றும் யுடியூப் கணக்குகளை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாமல் உள்ளனர். இதனை சீர் செய்யும் நோக்கில், 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத ஜி மெயில் கணக்குகள் மற்றும் யுடியூப் கணக்குகள் நீக்கப்படும் என்று கூகுள் (Google) நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, பயனர்கள் தங்கள் கூகுள் கணக்குகளை 24 மாதத்திற்கு ஒரு முறையேனும் லாக்-இன் செய்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அதிக நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளிலிருந்து தரவுகள் அதாவது அவர்கள் கூகுளில் சேமித்து வைத்திருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நீக்கப்படும் என்றும் இந்த புதிய கொள்கையானது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையானது பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பதற்காகவே கொண்டு வரப்பட உள்ளது. ஏனென்றால், ஒரு கணக்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களின் நடவடிக்கைகளில் கவனிக்க முடியாமல் போய்விடும். இதனால் அவர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இதனை கருத்தில் கொண்டே கூகுள் நிறுவனம் இத்தகைய அறிவிப்பை அறிவித்துள்ளது.