நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதேசமயம், 2000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்பொழுது 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. மே 23 (இன்று) முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் நாள் ஒன்றிற்கு ரூ.20,000 வரை வங்கிகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் இன்று முதல் வங்கிகளில் எந்த ஒரு ஆவணமும் கொடுக்காமல் டெபாசிட் செய்துகொள்ளலாம் அல்லது மாற்றிகொள்ளலாம் என்று அறிவித்த நிலையில், பல வங்கிகளில் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் போது அவர்களிடம் அடையாள சான்றிதழ் கேட்கப்படுவதாகவும் வங்கி கணக்கு இல்லாத வங்கிக்கு மாற்ற சென்றால் கட்டாயம் ஆவணங்களை கேட்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சில வங்கிகளில் விண்ணப்பம் கொடுத்து அதனை நிரப்ப சொல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.